கர்ளா’விசத்தை’ உதாரணமாக்கிய சப்ரகமுவ பல்கலைக் கழக விரிவுரையாளருக்கு கண்டனங்கள்

 

முஸ்லிம் பெண்கள் புகைப்படங்களில் முகத்தைத் காட்டலாம் என்பதற்கு சர்வதேச பயங்கரவாதப் போதகர் யூஸுப் அல் கர்ளாவியின் மகளை உதாரணம் காட்டிய சபரகமுவ பல்கலைக் கழக கலைபீட விரிவுரையாளர் அப்துல் ஹக் லாறீனாவிற்கு கண்டனங்கள்.

பேராதனைப் பல்கலைக் கழக முஸ்லிம் மஜ்லிஸ் 2021 ஆம் ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவு தொடர்பான அறிவித்தலில் முஸ்லிம் மாணவர்களின் புகைப்படங்கள் மட்டும் இடம் பெற்று, முஸ்லிம் மாணவிகளின் புகைப்படங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்ட விடயம் சமூக ஊடகங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த பிற்போக்குத் தனமான செயலை கண்டித்தவர்களில் பேராதனை பல்கலைக் கழக பழைய மாணவியும், சபரகமுவ பல்கலைக் கழக கலைபீட விரிவுரையாளரருமான சமூக, இலக்கிய செயற்பாட்டாளர் அப்துல் ஹக் லறீனா முக்கியமானவர். எனினும் அவர் பயன்படுத்தியுள்ள சில விடயங்கள் முஸ்லிம் சமூகத்தை ஆபத்தான பாதையை நோக்கி இட்டுச் செல்லக் கூடியனவாக உள்ளன.



சர்வதேச அரங்கில் இந்த நூற்றாண்டின் மிக குரூரமான இஸ்லாமியப் பயங்கரவாதப் போதகர் யார் என்று கேட்டால் அது யூஸுப் அல் கர்ளாவியே என்று சந்தேகத்திற்கு இடமின்றி குறிப்பிட முடியும். முஸ்லிமான ஆண்கள் மற்றும் பெண்கள் ஜிஹாதிய தற்கொலைத் தாக்குதல்களை நடத்தலாம் என்றும் தற்கொலைத் தாக்குதல் ஜிஹாதின் மிக உயர்ந்த படித்தரம் என்றும் மதத் தீர்ப்பு (பத்வா) வழங்கி தற்கொலைத் தாக்குதல்களை ஊக்குவித்தவர் அவர்தான். தற்கொலைத் தாக்குதல்கள் நடத்துவதை ஊக்குவிக்கும் அவரது பத்வா ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமியின் அல்ஹஸனாத் மாத இதழில் தமிழிற்கு மொழிபெயர்க்கப்பட்டு இலங்கையில் பிரசுரமாகியுள்ளது.





தற்கொலைத் தாக்குதல் நடத்தலாம் என்று மார்க்கத் தீர்ப்பு வழங்கிய இதே யூஸுப் அல் கர்ளாவிதான் இஸ்லாத்தை விட்டு வெளியேறுபவர்களை கொலை செய்வதையும் நியாயப்படுத்தி இருக்கின்றார். https://youtu.be/huMu8ihDlVA இஸ்லாத்தை விட்டு வெளியேறுகின்றவர்களை கொலை செய்ய வேண்டும் எனும் கட்டளை ஹதீஸ்களில் மட்டுமே உள்ளது என்று நினைத்திருந்த வேளையில், குர்ஆனின் சூரத்துல் மாயிதாவின் 33 ஆவது வசனம் இஸ்லாத்தை விட்டு வெளியேறுபவர்களை கொலை செய்வதையே குறிப்பிடுகின்றது என்று விளக்கமாக சொல்லி கொலை செய்வதை நியாயப் படுத்தியவர் இந்த யூஸுப் அல் கர்ளாவியே. இவை தவிரவும் இவருக்கு பயங்கரவாதத்துடன் மேலும் தொடர்புகள் உள்ளன.



வன்முறை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தூண்டிய குற்றச்சாட்டில் எகிப்திய நீதிமன்றத்தால் இவருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. இத்தகைய மோசமான பயங்கரவாத சிந்தனை மற்றும் பின்னணி கொண்ட ஒருவரிடம் இருந்து உதாரணம் எடுத்து இலங்கை முஸ்லிம் பெண்களுக்கு முன்மாதிரியாகக் கொடுப்பது ஆபத்தான ஒன்றாகும். மேலும் இஹ்வானிச சிந்தனை கொண்ட கன்னூசியின் மகளையும் லறீனா உதாரணப் படுத்தி இருக்கின்றார். https://www.facebook.com/lareena777/posts/3615525371816402


பெண்களின் புகைப்படங்களை மறைக்கும் பிற்போக்குத் தனத்தை விடவும், இலங்கையை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும், முழு உலகையும் இஸ்லாமிய கிலாபத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று திட்டமிட்டு நாகரீகமான முகத்துடன் இயங்கும் இஹ்வானிச மற்றும் ஜமாத்தே இஸ்லாமிய கொள்கைகள் ஒப்பீட்டளவில் மிகவும் ஆபத்தானவை ஆகும். இத்தகைய கொள்கைகளை கொண்டவர்களை சபரகமுவ பல்கலைக் கழக விரிவுரையாளர் உதாரணங்களாக முன்வைப்பது மிகவும் ஆபத்தானது. அதனை கண்டிக்கின்றேன்.


புகைப்படங்களில் முகத்தை காட்டலாம் என்று இலங்கை முஸ்லிம் பெண்களை ஊக்குவிக்க வேண்டுமானால் அதற்கு உதாரணம் சொல்வதற்கு எத்தனயோ பெண்கள் இருக்க, இல்ஹாம் கர்ளாவி, யுஷ்ரா கன்னூஷி போன்ற இஹ்வானிஸ்டுகளை அவர்களின் தந்தையர்களை மையப்படுத்தி தெரிவு செய்து இலட்சியப் பெண்களாக இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் காட்ட முனைந்திருப்பது ஆபத்தானது ஆகும். இதனை லறீனா அறியாமல் செய்தாரா அல்லது அறிந்துதான் செய்தாரா என்று தெரியவில்லை. அறிந்து செய்திருந்தால் அவர் தனது சிந்தனைப் போக்கை மீளாய்வு செய்துகொள்வது அவசியமாகும். வெறுமனே தலிபானிசம், சஹ்ரானிசம், முல்லாயிசம் என்று மட்டும் குறை சொல்வதால் ஆபத்து நீங்கிவிடப் போவதில்லை.


தலிபானிசம், முல்லாயிசம் போன்றவை அழுக்குத் தலைப்பாகை, ஒழுங்கற்ற பற்றைத் தாடியுடன் அலங்கோலமாக உலாவும், சஹ்ரானிசமோ வெட்டுவோம், கொத்துவோம், கொல்லுவோம் என்று காட்டுக் கத்தல் கத்திக்கொண்டு கண்களில் கொலை வெறி தெரிய உலாவும், அவற்றை இலகுவாக இனம் கண்டுகொள்ளலாம். ஆனால் கர்ளா’விசமோ’ ( அதாவது ஜமாத்தே இஸ்லாமிசம் மற்றும் இஹ்வானிசம்) பார்ப்பதற்கு வெளிப்படையாக இருக்காது, புள் ஷேவ் எடுத்து, கோர்ட் ஷூட் போர்ட்டு, மிக நாகரீகமான தோற்றத்தில் எல்லோருடனும் கை குலுக்கிக்கொண்டு, பியர் கிளாஸுடன் அழகாக சிரித்து ஏமாற்றிக்கொண்டே முழு நாட்டையும் இஸ்லாமிய மயப்படுத்த நுணுக்கமாக திட்டமிட்டு செயலாற்றும்.


பிற்போக்குத் தனத்தை விடவும், திடீர் ஆவேச தாக்குதல்களை விடவும், மிக நேர்த்தியாக திட்டமிட்டு நாட்டையும், உலகையும் மொத்தமாக விழுங்க முனையும் கிலாபத் பயங்கரவாதம் நீண்டகால நோக்கில் அதிகம் ஆபத்தானது. பாதுகாப்புத் தரப்புகள் சற்று விழிப்புணர்வுடன் இருந்தாலே போதும், திடீர் ஆவேச தாக்குதல்களை தடுத்துவிடலாம் என்பதை உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் வெளியாகும் தகவல்கள் வெளிப்படுத்துகின்றன, ஆனால் கர்ளாவிச பயங்கரவாதம் மிகவும் ஆபத்தானது, பார்ப்பவர்களுக்கு அது பயங்கரவாதம் என்று புரியாது, அது பொதுச் சமூக செயற்பாட்டாளர்களுடன், இலக்கியவாதிகளுடன், இடதுசாரிகளுடன் ஒன்றாக உட்கார்ந்து மூலிகை புகைத்துக் கொண்டு, திரைப்பட விமர்சனம் செய்துகொண்டு, நடப்பு அரசியல் பேசிக்கொண்டு, பியர் குடித்துக்கொண்டு இருக்கும், அடையாளம் காண்பது கடினம். இப்பொழுதே விழித்துக் கொள்ளாவிட்டால், தட்டி எழுப்பப்படும் பொழுது எல்லாமே தாமதமாகி விட்டிருக்கும்.


கர்ளாவிசம் குறித்து எச்சரிக்கையாக இருப்போம், அதனை ஊக்குவிப்பதை, பிரச்சாரம் செய்வதை கண்டிப்போம்.

குறிப்பு : இந்தப் பதிவு கர்ளாவிசம் (இஹ்வானிசம், ஜமாத்தே இஸ்லாமிசம்) ஆபத்தானது என்பதால், உரிய ஆதாரங்களை முன்வைத்து எழுதப்பட்ட ஒன்றாகும், இதனை குறித்த விரிவுரையாளருக்கு எதிரான ஒரு பதிவாகவோ, பெண்களுக்கு எதிரான பதிவாகவோ அர்த்தப்படுத்த முற்பட, மடைமாற்ற முற்பட வேண்டாம், அவ்வாறு செய்ய யாரவது முயன்றால் ஆக்கியோன் பொறுப்பல்ல.

-றிஷ்வின் இஸ்மத்
06.01.2021



பொறுப்புத்துறப்பு:
எனது பதிவுகள், இடுகைகள், பகிர்வுகள், பின்னூட்டங்கள் மற்றும் பதில்களின் கீழே பதியப்படும் கருத்துக்களில் மிகவும் காத்திரமான கருத்துக்கள் மட்டுமே கவனத்திற் கொள்ளப்பட்டு பதிலளிக்கப்படும், அல்லது அவற்றிற்கான பதில்கள் முக்கியத்துவம் கருதி தனிப் பதிவாக இடப்படும். அர்த்தமற்ற புலம்பல்கள், நேரம் மற்றும் வளங்களை விரயமாக்கும் நோக்கில் அமைந்த கருத்துக்கள் மற்றும் கேள்விகள், ஆரோக்கியமற்ற கருத்துக்கள், விடய அறிவு இன்றி முன்வைக்கப்படும் கருத்துக்கள், பதிவுடன் எவ்விதத்திலும் தொடர்பற்ற கருத்துக்கள், காழ்ப்புணர்வின் காரணமாக வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் ஆகியவை கவனத்தில் கொள்ளப்படமாட்டது. அத்துடன் மோசமான மொழிநடையில் அமையும் கருத்துக்கள் காணப்பட்டால் அவை அவ்வப்பொழுது நீக்கப்படும். முறையற்ற கருத்துக்களை தொடர்ந்து பகிரும் கணக்குகள் Block செய்யப்படும்.