சபரிமலைக்குப் பெண்கள் போவது ஓர் வெற்றியா?

சபரிமலைக்குப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்கின்ற நீதிமன்றத் தீர்ப்பை வெளிப்படையாக பார்க்கும் பொழுது அது ஒரு வெற்றி போன்று தோன்றினாலும், உண்மையில் அது மனிதகுலத்திற்கு ஓர் வெற்றியா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு குறுநில மன்னன் ஒவ்வொரு இரவும் ஒரு புதுப் பெண் வேண்டும் என்று தனது ஆட்சிப் பிரதேசத்திற்கு உட்பட்ட பெண்களை ஒவ்வொரு இரவும் ஒருத்தி என்று அரண்மனைக்கு இழுத்துவந்து அனுபவித்துவிட்டு காலையில் அன்பளிப்புக்களை கொடுத்து அனுப்பிவிடுவான். எனினும் தெற்குப் பக்கம் இருந்த ஊரில் வாழ்ந்த பெண்களை அவன் அனுபவிக்க இழுத்துவருவதே இல்லை. காரணம் என்னவென்றால் குறித்த ஊரார் தாழ்த்தப்பட்ட / தீண்டத்தகாத மக்கள் என்பது மன்னனினதும், அவன் பரிவாரங்களினதும் நம்பிக்கையாக இருந்தது. எல்லா ஊர்ப் பெண்களையும் அனுபவிக்கும் மன்னன் தம்மை மட்டும் புறக்கணிக்கின்றானே என்று கவலைப்பட்டு அந்தப் பாகுபாட்டிற்கு எதிராக தெற்குப் பக்க ஊர் பெண்கள் தம்மையும் மன்னன் அனுபவிக்க வேண்டும், தாம் அனுபவிக்கப்படத்தகாதவர்கள் அல்ல என்று போராடி மன்னனின் சம்மதத்தை பெற்றால் அதனை உண்மையான வெற்றி என்றோ, விடுதலை என்றோ சொல்லவா முடியும்? எப்பொழுது மன்னனின் செயலுக்கு எதிராக அனைவரும் கிளர்ந்து எழுந்து மன்னனின் பெண் வேட்டையை முடிவுக்குக் கொண்டு வருகின்றார்களோ, அதுதான் உண்மையான வெற்றி, உண்மையான விடுதலை. இப்பொழுது சபரிமலைத் தீர்ப்பால் நடந்திருப்பது என்ன, உண்மையில் நடந்திருக்க வேண்டியது என்ன என்பதை கொஞ்சம் சிந்திப்போம்.


முஸ்லிம் மஸ்ஜித்களுக்கு பெண்கள் செல்வதற்கு நடைமுறையில் தடை இருக்கின்றது. அந்தத் தடை நீக்கப்பட வேண்டும் என்று குரல்கள் எழுப்பப்படுகின்றன. ஆண்கள் அடிக்கடி பள்ளிவாசல்களுக்குள் செல்வதால் அதில் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் வெறித்தனமான மற்றும் முட்டாள்தனமான போதனைகளால் பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக மதவெறி பிடித்தவர்களாகவும், தீவிரவாதிகளாகவும் மாறும் நிலையில், பெண்கள் அங்கே போகாமல் இருப்பதால் பெண்களுக்கு நன்மையே தவிர, பாதிப்பு ஒன்றுமே இல்லை. உண்மையிலேயே அல்லாஹ் என்ற படைப்பாளரும் இருந்து, பள்ளிவாசல் செல்வதால் பெண்களுக்கும் அதிகமதிகம் நன்மைகளும் கிடைத்து, அதன் பயனாக ஆண்களும், பெண்களும் சமத்துவமாக இருக்கும் சுவர்க்கம் பெண்களுக்கும் கிடைக்கும் என்பது உண்மை என்றால் மட்டுமே பெண்கள் பள்ளிவாசலுக்குள் அனுமதிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை முற்போக்கான ஒன்றாக இருக்கும். அதல்லாதவிடத்து அல்லாஹ், இஸ்லாம் போன்ற பிழையான நம்பிக்கைகளால் ஆண்கள் தவறான பாதையில் செல்வதை விட்டும் அவர்களை மீட்டெடுக்க போராடுவதே சரியானது.


கிறிஸ்தவ மதத்தில் பெண்கள் எத்தகைய தடையும் இல்லாமல் தேவாலயங்களுக்கு செல்லலாம் என்பதால் நடந்திருக்கும் விடயம் அதிகமான பெண்கள் தேவனால் இரட்சிக்கப் பட்டார்கள் என்பதா? இல்லவே இல்லை, மாறாக அதிகமான பெண்கள் பாதிரியார்களால் பாலியல் துன்புறுத்தல், துஷ்பிரயோகம் ஆகியவற்றிற்கு உள்ளனதே நடந்துள்ளது, சிறுவர்களுக்கும் இதே நிலைதான்.


ஆக, அறிவியல் வளச்சி மற்றும் சட்டத்தின் துணையுடன் ஒழித்துக் கட்டப்பட வேண்டியவற்றை ஒழித்துக் கட்ட முயற்சி செய்யாமல், அவற்றில் பங்கு கேட்பதோ, அவற்றின் பாதிப்புகளில் வலிந்து பலியாகிக் கொள்வதோ வெற்றி கிடையாது.


சபரிமலைக்கு செல்வதற்கு தமக்கும் அனுமதி வேண்டும் என்று பெண்கள் கேட்டதன் பின்னணியில் இருந்தது சபரிமலை புனிதமான இடம் என்கின்ற மிகப்பெரிய மூடநம்பிக்கையே ஆகும். சபரிமலை மட்டுமல்ல, மக்கா, மதீனா, வத்திக்கான், ஜெருசலம், திருப்பதி, புத்தகயா, அனுராதபுரம் என்று உலகில் எந்த இடமும் புனிதம் என்று கிடையாது என்கின்ற உண்மையை மக்களுக்கு புரிய வைப்பதுதான் உண்மையான வெற்றிக்கான போராட்டமே தவிர, சபரிமலைக்குள் நுழைந்து பூஜையில் பங்கேற்க பெண்களுக்கு அனுமதி பெற்றுக் கொடுப்பதோ, மக்காவுக்குள் நுழைந்து ஹஜ்ஜு செய்ய யூதர்களுக்கு அனுமதி பெற்றுக் கொடுப்பதோ அல்ல.


உலகில் சில பகுதிகளை விட சில பகுதிகள் சிலருக்கு சிறப்பாக இருக்கும், அவற்றிற்கான காரணம் பிரதேசத்திற்கு பிரதேசம் காணப்படும் காலநிலை, இயற்கை வள, தாவரவியல், புவியியல் வேறுபாடுகள் போன்றவையே தவிர, புனிதம், புனிதமின்மை என்கின்ற வேறுபாடு அல்ல. 'யாதும் ஊரே, யாவரும் கேளீர்' என்பதற்கமைய வாழ முயல வேண்டுமே தவிர, எந்த ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு புனிதத்துவம் கொடுப்பதோ அல்லது புனிதம் என்ற பெயரில் நடக்கும் ஏமாற்று, தில்லுமுள்ளு வேலைகளில் ஏமாற அனுமதி கேட்பதோ ஆரோக்கியமானது அல்ல.


சபரிமலைக்கும், பள்ளிவாசலுக்கும் பெண்கள் போவதோ, மக்காவுக்குள் கிறிஸ்தவர்கள் போவதோ வெற்றி அல்ல, மாறாக சபரிமலைக்கோ, மக்காவிற்கோ, தேவாலையத்திற்கோ, கோயிலுக்கோ, பள்ளிவாசலிற்கோ (ஆண், பெண், மாற்றுப் பாலினத்தார் உட்பட) யாருமே போகத்தேவையில்லை என்கின்ற அறிவு மக்களுக்கு வருவதுதான் உண்மையான வெற்றி. உண்மையான வெற்றிக்கு உழைப்போம்.