புத்தர் சிலை தகர்ப்பு, முஸ்லிம்கள் அடுத்து செய்ய வேண்டியது என்ன?

புத்தர் சிலை தகர்ப்பு தொடர்பில் அதன் பின்னணிக் காரணங்களையும் இணைத்து நான் எழுதியமை தொடர்பில் முஸ்லிம்கள் பலர் என்மீது வீணாகக் கோபம் கொண்டுள்ளனர். அவ்வாறு கோபம் கொண்டுள்ளவர்களில் இரு முக்கிய பிரிவினர் உள்ளனர்.



ஒரு பிரிவினருக்கு நடந்த விடயங்கள் குறித்து எதுவுமே தெளிவாகத் தெரியாது, நான் ஆரம்பத்தில் நினைத்துக் கொண்டிருந்தது போன்று 'முஸ்லிம்கள் இப்படி செய்ய மாட்டார்கள், முஸ்லிம்கள் மீது பழியைப் போட வேறு யாரோ செய்த சதி' என்று இன்னுமும் நம்பிக்கொண்டு கொண்டு இருப்பவர்கள் அவர்கள். (பெரும்பாலும் மாவனல்லைக்கு வெளியிலும், வெளிநாடுகளிலும் வசிப்பவர்கள்.)



மற்றப் பிரிவினரோ நடந்தவை அனைத்தையும் அறிந்தவர்கள், என்னையும் விட தகவல்களை தெரிந்தவர்கள். இப்ராஹீம் மெளலவி மற்றும் ஜமாத்தே இஸ்லாமி இடையேயான இடைவெளி உருவாகியமை, அவரது 'தூய்மையான இஸ்லாமிய பிரச்சாரம்' என்று சொல்லப்படும் ஐஎஸ்ஐஎஸ் சார்பான பிரச்சாரம் தொடர்பான தகவல்கள், அவரது மகன் துருக்கியில் கல்வி கற்க செல்வதாக சென்று வந்த விடயத்தில் உள்ள மர்மங்கள், கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் தொடர்பான தகவல்கள் என்று நிறையவே அறிந்தவர்கள். அவர்களது நோக்கம், இந்த விடயத்தை வெளியில் பேசாமல், அப்படியே அமுக்கி மூடி மறைத்து வைத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும், இஸ்லாத்தையும் பாதுகாத்துவிடலாம் என்பது மட்டுமே.



முதல் பிரிவினர் தாமதமாகவேனும் உண்மைகளை அறிய வரும் பொழுது நான் எழுதியதில் தகவல் ரீதியான தவறுகள் இல்லை என்கின்ற உண்மையை உணரலாம், எனினும் அனைத்தையும் மூடி மறைக்க நினைக்கும் இரண்டாம் பிரிவினர் என்னை இலகுவில் சரிகாணப் போவதில்லை என்கின்ற பொழுதும், நான் எழுதி இருக்காவிட்டாலும் குறித்த விடயம் BBC சிங்கள சேவை உட்பட, மவ்பிம போன்ற சிங்கள நாளேடுகளிலும் (http://www.mawbima.lk/print20180101MB20181230.php?id=25148) "குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதாலேயே செய்தோம்" என்கின்ற இளைஞர்களின் வாக்குமூலத்துடன் பகிரங்கமாகி விட்டது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.



விடயத்தை பேசாமல் இருப்பதை விட, இத்தகைய ஆபத்தான நிலை உருவாகியது எப்படி என்பதை ஆராய்ந்து, தவறு எங்கே என்பதை உணர்ந்துகொள்வதே இலங்கை முஸ்லிம்களது முதல் பணியாக இருக்க வேண்டும். வெளிநாட்டு பணம் மற்றும் உள்நாட்டு நன்கொடைகளில் இயங்கும் இஸ்லாமிய இயக்கங்கள் முஸ்லிம்கள் மத்தியில் இஸ்லாமிய பிரச்சாரத்தை மேற்கொள்கின்றன. "இஸ்லாம் சமாதானத்தின் மார்க்கம்" என்று எவ்வளவுதான் வலிந்து வலிந்து சொன்னாலும், ஏனைய மக்கள், மதங்கள் மீதான வெறுப்பு, வன்முறை, ஆதிக்க மற்றும் ஆக்கிரமிப்பு மனப்பான்மையை உருவாக்குதல் போன்றவற்றை போதிக்கும் ஒரு மதமே இஸ்லாம் என்பதை இஸ்லாத்தை முறையாகக் கற்ற யாருமே மறுக்க முடியாது.



இப்பொழுது பேசப்படும் இந்த மாவனல்லை விடயம் இன்னும் சில காலங்களில் எதோ ஒரு வகையில் தணிந்து போகலாம், ஆனால் இஸ்லாம் மதமானது போதிக்கப்படும் வரை, குரான், ஹதீஸ் என்பவை போதிக்கப்படும் வரை வன்முறைச் சிந்தனை கொண்டவர்கள் உருவாகுவதை தவிர்க்கவே முடியாது. மதத்தை காப்பதற்காக போராடி மரணிப்பதை வாழ்வின் மிக உன்னதமான விடயமாக போதனை செய்யும் மதத்தின் நம்பிக்கையைக் கொண்டு நிரப்பப்படும் உள்ளங்கள் எந்நேரமும் வன்முறையானவையாக மாறக் கூடும். குரான் விளக்கம், குரான் ஹதீஸ் என்கின்ற அடிப்படையில் 1990 இன் ஆரம்பத்தில் இருந்தே இப்ராஹீம் மெளலவி ஜமாத்தே இஸ்லாமியுடன் இணைந்து இஸ்லாமிய பிரச்சாரம் செய்து வந்ததை நான் அறிவேன். அவரது பல இஸ்லாமிய வகுப்புக்களிலும் நான் கலந்துகொண்டிருக்கின்றேன். அவர் ஐஎஸ்ஐஎஸ் சார்பான நிலைப்பாட்டை மேற்கொண்டது மிக அண்மையில் நடந்த ஒன்றாகும். ஆக, இஸ்லாத்தை கற்கும் எவரும் உரிய சந்தர்ப்பங்கள் வரும் பொழுது வன்முறையாளர்களாக, வன்முறை தூண்டிகளாக மாற்றமடையக் கூடிய விதத்திலேயே இஸ்லாம் அமைந்துள்ளது. ஆகவே மாணவர்களை 7 நாட்கள், 5 நாட்கள் என்று பல்வேறு பட்ட வதிவிடப் பயிற்சி நெறிகளுக்கு அழைத்துச் சென்று இஸ்லாமிய இயக்கங்கள் இஸ்லாத்தை ஊட்டும் பொழுது, குறித்த மாணவர்கள் பயங்கரவாத சிந்தனையுள்ளவர்களாக மாறும் வாய்ப்பு எதிர்காலத்திலும் இருந்துகொண்டே இருக்கும். இதற்காக இஸ்லாமிய இயக்கங்களை மட்டும் குறை கூறுவதில் பலனில்லை, ஏனென்றால் இஸ்லாம் அவ்வாறனதாகவே அமைந்துள்ளது.


குறித்த இளைஞர்கள் பிழையாக வழிநடாத்தப்பட்டு சிலைகளை உடைத்தார்கள், இஸ்லாம் அப்படி ஒருபொழுதுமே சொல்லவில்லை என்று சொல்லிக்கொண்டு சிலர் கிழம்பி வர வாய்ப்புள்ளது. எனினும் இளைஞர்களின் செயல் இஸ்லாத்தை அடியொட்டியே அமைந்திருந்தது என்பதை குரானும் ஹதீஸும் கற்றுத் தருகின்றன.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்கள் சிலைகளுக்கு ஒரு சதி செய்வேன்!” என்று கூறிய இப்றாஹீம் (அலை) அவர்கள் அவற்றில் பெரியதைத் தவிர மற்ற எல்லா சிலைகளையும் உடைத்து துண்டு துண்டாக்கினார்.......
(அல்குர்ஆன் : 21:57-58)

ஜரீர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், 'தவ்ஸ் மற்றும் கஸ்அம் குலத்தாரின் தெய்வச் சிலைகள் உள்ள ஆலயமான துல்கலஸாவின் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா?' என்று கேட்டார்கள். அது கஸ்அம் குலத்தாரிடையே 'யமன் நாட்டு கஅபா' என்றழைக்கப்பட்டு வந்த ஆலயமாக இருந்தது. நான் அஹ்மஸ் குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் புறப்பட்டேன்; அவர்கள் சிறந்த குதிரைப் படையினராக இருந்தனர். நான் குதிரையின் மீது (சரியாக) உட்கார முடியாதவனாயிருந்தேன். எனவே, நபி(ஸல்) அவர்கள் என் நெஞ்சில் அடித்து, 'இறைவா! இவரை உறுதிப்படுத்து இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்கு' என்று பிரார்த்தனை செய்தார்கள். எனவே, நான் அந்த ஆலயத்தை நோக்கிச் சென்று அதை உடைத்து எரித்து விட்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதருக்கு (காரியம் முடிந்துவிட்டதைத்) தெரிவிப்பதற்காக ஆளனுப்பினேன். நான் அனுப்பிய தூதுவர் நபி(ஸல்) அவர்களிடம், 'உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அந்த ஆலயத்தை மெலிந்து இளைத்துப் போன அல்லது சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்றுவிட்டுவிட்டுத் தான் உங்களிடம் வந்திருக்கிறேன்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் அஹ்மஸ் குலத்தாருக்கும் அவர்களின் குதிரைப் படை வீரர்களுக்கும் பரக்கத் (எனும் அருள்வளத்)தை அளிக்கும்படி ஐந்து முறை இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.

ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 56. பாடம் : அறப்போரும் அதன் வழிமுறைகளும் ஹதீஸ் 3020.



இஸ்லாம் இப்படியானதாக இருக்கும் நிலையில், நாம் செய்ய வேண்டியது என்ன என்கின்ற கேள்வி எழுவது இயல்பே. இஸ்லாம் என்பது அனைத்தையும் படைத்த இறைவனிடம் இருந்து வந்த பாதுகாக்கப்பட்ட, கலப்படங்கள் எதுவுமே இல்லாத உண்மையான தூய இறுதி வழிகாட்டல் என்றால், யார் என்ன சொன்னாலும், விளைவுகள் எப்படியானவையாக இருந்தாலும், எதைப்பற்றியும் கவலைப்படாமல் அதனை பின்பற்றித்தான் ஆக வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து எதுவுமில்லை. ஆனால் இஸ்லாம் என்பது 7ஆம் நூற்றாண்டு பாலைவன மனிதர் ஒருவரால் பைபள், தோரா, சொராஸ்டரிஸம், கிரேக்க தத்துவங்கள் போன்றவற்றில் இருந்து காப்பி பண்ணப்பட்டவற்றுடன் சொந்தக் கற்பனைகளையும் சேர்த்து உருவாக்கப்பட்டு, பிற்காலத்தில் வந்தவர்களால் மெருகூட்டப்பட்ட ஒரு மதமாக இருக்குமானால், இதுதான் முழுமையான, சரியான இஸ்லாம் என்று அடையாளம் காணப்பட முடியாத அளவிற்கு பிரிவுகள், பிளவுகள், சந்தேகங்கள், முரண்பாடுகள், அறிவியலுக்கு பொருந்தாத விடயங்கள் எல்லாம் உள்ள ஒன்றாக இருக்குமானால், அதனை இறைவேதம் என்று நம்பிப் பின்பற்றி நமது வாழ்வையும், மற்றவர்களின் வாழ்வையும், உலக அமைதியையும் நாசம் செய்வது மனித குலத்திற்கு எதிரான மாபெரும் குற்றம் ஆகும்.



இஸ்லாம் இறைவேதம்தான் என்கின்ற குருட்டு நம்பிக்கையுடன் அதனை உறுதியாக பின்பற்ற முயன்று வெறித்தனமானவர்களாக மாற முயலாமல், இஸ்லாம் என்பது அனைத்தையும் படைத்த யாவற்றையும் நன்கறிந்த உண்மையான இறைவனிடம் இருந்து வந்த பாதுகாக்கப்பட்ட, கலப்படங்கள் எதுவுமே இல்லாத தூய இறுதி வழிகாட்டல் தானா என்பதை மிகவும் புத்திக் கூர்மையுடன், நடுநிலையுடன் அறிவு ரீதியாக ஆராய்ந்து அறிய முயல வேண்டும். அத்துடன் முஹம்மது நபியின் வாழ்க்கையை முழுமையாக படித்து, அவர் இறைதூதர் என்று நம்பக்கூடிய தகுதியில் வாழ்ந்து இருக்கின்றாரா, குறைந்த பட்சம் சாதாரண மனிதராக மதிக்கப் படக்கூடிய நிலையிலாவது இருந்தாரா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். நமது நாட்டிற்கோ, நாம் வாழும் பிரதேசத்திற்கோ தொடர்பற்ற ஒன்றை வீணாக இறைவேதம் என்று நம்பி பின்பற்றி தொடர்ந்தும் அனைவருக்கும் தொல்லையாக இருக்க வேண்டுமா என்பதை முஸ்லிம்கள் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளார்கள். இந்தப் பதிவு உங்களுக்கு வெறுப்பானதாக இருக்கக் கூடும், எனினும் நிதானமாக சிந்தித்தால் ஒருநாள் நீங்கள் கண்திறக்க உதவக் கூடும்.